என்றும் இளமையுடன் இருக்க - சலபாசனம்!

உலக சிருஷ்டியில் எத்தனை உயிரினங்கள் உண்டோ அவ்வளவு ஆசனங்கள் உள்ளன. பரமசிவனால் 84 லட்சம் ஆசனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என புராணங்கள் கூறுகின்றன. அதில் 84 எல்லாவற்றிலும் சிறந்தன. அவற்றுள்ளும் 32 மிகப் பயன்படத்தக்கவை.

ஆசனங்கள் பலவகை:

  1. நின்று செய்யக்கூடியன.
  2. அமர்ந்து செய்யக்கூடியன.
  3. படுத்துச் செய்யக்கூடியன.
  4. மேலாகச் செய்யக்கூடியன.
ஒவ்வொரு ஆசனமும் ஒருசில நோய்களை நீக்குவதாகும். எனவே, நோயின் தன்மை அறிந்து அவ்வகை ஆசனங்களைச் செய்தால் நோயிலிருந்து விடுதலை பெறலாம்.



சலபாசனம்:

‘சலபம்’ என்ற வடசொல்லுக்கு ‘வெட்டுக்கிளி’ என்று பொருள். நோய்கள் அனைத்தையும் வெட்டி எறிவதால் இவ்வாசனம் ‘சலபாசனம்’ என்று பெயர் பெற்றது. மேலும் இந்த ஆசனத் தோற்றம் வெட்டுக்கிளி வடிவில் இருப்பதாலும் இப்பெயர் கொள்ளலாம். இருதய நோயுள்ளவர்களும் இரத்த அழுத்த நோயுள்ளர்களும் இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது.

செய்முறை:

  1. தரை விரிப்பின் மீது முதலில் குப்புறப்படுக்க வேண்டும். கால்கள் சேர்ந்து இருக்க வேண்டும். கைகளைப் பின்புறம் நீட்டிக் கொள்ளவும்.

  2. முகவாய்க்கட்டை தரையில் படும்படி முகத்தை சற்று உயர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

  3. கை விரல்களை நன்கு மடக்கி தொடைகளுக்குக் கீழே வைத்துக்கொள்ள வேண்டும்.

  4. பின்னர் மூச்சை இழுத்துக் கொண்டே கைகளைத் தரையில் அழுத்திக் கொண்டு தலை, நெஞ்சுப் பகுதி இரண்டு கால்களையும் சேர்ந்த மாதிரி ஒரே சமயத்தில் மேலே உயர்த்த வேண்டும்.

  5. கால்களை வளைக்காமல் 45 டிகிரி வரை உயர்த்த வேண்டும்.

  6. இதே நிலையில் பத்து முதல் இருபது வினாடிகள் வரை இருக்கலாம். இப்போது உடலின் எடை தரையோடு தரையாக இருக்கின்ற மார்பு, கைகள் இவற்றின் மீதுதான் விழும். தொடைப் பகுதிகள், கால்கள், முன் பாதங்கள் எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போல் நீட்டியிருக்க வேண்டும். 20 வினாடிகள் வரை இந்த ஆசனத்தில் இருக்கலாம்.

  7. பின்பு மெதுவாக மூச்சை விட்டபடி கால்களை மெல்லக் கீழே இறக்க வேண்டுத். தரையில் படியும்படி கால்கள் வளையக்கூடாது. களைப்பு வரும் வரை இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது. முதலில் கால்களை பின்புறமாக அதிக உயரம் தூக்குவது கடினமாக இருக்கும். தொடர்ந்து பயிற்சியில் எளிதாகச் செய்ய முடியும். இப்படி மூன்று முதல் ஐந்து தடவைகள் செய்யலாம்.

  8. கால்களை மேலே தூக்கும் போது தொப்புளுக்குக் கீழேயுள்ள பாகம் மட்டுமே உயர்த்தப்பட வேண்டும். உடம்பின் அடிவயிற்றின் முன்பகுதி மட்டும் தரையில் படிந்தவாறு இருந்து உடல் எடையைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.

  9. உள்ளங்கால்கள் வளையாமல் ஆகாயத்தை நோக்கி இருத்தல் வேண்டும்.

  10. பிட்டத்தைச் சுருக்கி, இறுக்கமாக வைக்கவும். தொடை தசைகளை விரித்தவாறு வைக்கவும்.

  11. கால்கள் விரைப்பாகவும், சேர்ந்தும், ஒன்றோடு ஒன்று தொடை, முட்டி மற்றும் கணுக்கால் பகுதியில் சேர்ந்திருக்க வேண்டும்.

  12. உடல் எடையைக் கைகளால் தாங்கக் கூடாது. கைகளை நன்கு பின்புறம் நீட்டிக் கொள்ள வேண்டும்.

  13. முடிந்த அளவுக்கு இயல்பாகச் சுவாசித்தவாறு இருக்கவும். ஆரம்பத்தில் நெஞ்சுப் பகுதியையும் தொடைகளையும் தரையிலிருந்து உயர்த்துவது சிரமமாகத்தான் இருக்கும். அடிவயிற்றுத் தசை நார்கள் உறுதி அடைந்து விட்டால் இரு கால்களையும் நெஞ்சுப் பகுதியையும் நன்கு உயர்த்த முடியும்.


பலன்கள்:

  1. சிறுநீரகம் நன்கு செயல்படுவதற்கும் சிறுநீரக நோய்கள் நீங்குவதற்கு துணை புரிகிறது.

  2. வயிற்றுப் பகுதி அழுத்தப்படுவதால் உடலின் கீழ்ப்பகுதிக்கு அதிகப் பலன்கள் கிடைக்கின்றன. பெருவயிறு எனப்படும் தொந்தி கரைகிறது.

  3. வயிற்றுப் பகுதிக்கு அதிகமான இரத்த ஓட்டம் ஏற்படுவதால் பாலுறவுச் சுரப்பிகள் வலுவடையும். இல்லறத்தில் நீடித்த இன்பம் துய்க்க வழிவகுக்கும்.

  4. கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்ற உறுப்புகளின் கோளாறு நீங்கும்.

  5. மூலம் என்கிற கொடிய வியாதியை அறவே அழித்து ஒளிப்பதில் இந்த சலபாசனம் முன் நிற்கிறது.

  6. நுரையீரல் நன்கு விரிவடைந்து பலமடைவதுடன் ஆஸ்துமா போன்ற நோய்களை நீக்கும்.

  7. முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றை நெருங்க விடாது.

  8. குடல்கள் நன்கு இழுக்கப்படுவதால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறு நீங்கும்.

  9. என்றும் இளமையுடன் இருக்க வைக்கும் ஆசனம் இது. இந்த ஆசனம் முதுகெலும்பை பின்னால் வளைக்கக்கூடிய தன்மை பெற்றிருப்பதால் சோம்பேறித்தனத்தை ஒழித்துக் கட்டுகிறது.
Special பலன்கள்...
  • தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பையைக் குறைக்கிறது.
  • ஆண்மை சக்திபெருகும்.
  • ஜீரண சக்தியை பெருக்கும்.
  • சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படும்.
  • சோம்பல் இன்றி எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்யும்.
  • இதய மற்றும் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் இவ்வாசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

எச்சரிக்கை : இந்த ஆசனத்தை சிறுநீரகக் கோளாறினால் அவதிப்படுவோர், குடல்வாயு மற்றும் அதிக இரத்த அழுத்தக்காரர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது.
குருவின் ஆலோசனைப்படி கேட்டு ஆசனம் செய்வது சாலச்சிறந்தது!!!

நன்றி :உங்களுக்காக
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top